காசிம் புலவர்

28/03/2009 at 9:33 pm (காசிம் புலவர்)

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களில் இசைத்தமிழ் இலக்கியம் படைத்த பெரும் புலவர் காசிம் புலவர். இவர் கடற்கரைப்பட்டினமான காயல் பட்டினத்தில் பிறந்தவர். இவர் முன்னோர்கள் எகிப்து நாட்டின் தலைநகரமான அல் காஹிரா (கெய்ரோ) மாநகரச் சேர்ந்தவர்கள்.

காசிம் புலவர் இளமையிலேயே இஸ்லாமிய மார்க்க ஞானம் மிக்கவராக விளங்கினார். திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்றார். இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார்.

ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் “என்னால் பாட முடியும்” என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

“பகருமுருவிலி அருவிலி வெருவிலி” எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார்.

இவர் ஹிஜ்ரி 1177 துல்கஃதா பிறை 12 வெள்ளி இரவன்று காலமானார். இவரது உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆண்மக்கள் இருவரும் இவரைப் போலவே திறம்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களாக விளங்கினர்.

பி.கு.

காசிம் புலவரின் ‘திருப்புகழ் ‘பாடல்களை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் பாடி இசைத்தட்டுகளாக வெளியிட்டுள்ளார்.

காசிம் புலவரின் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது குமரி அபுபக்கரின் தனித்திறமை எனக் கூறலாம்.  (இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தரின் தந்தை.)

Permalink 2 Comments